ஆமோஸ் 5:1-15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.

2. இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.

3. நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.

4. கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

5. பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்.

6. கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும்.

7. நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்.

8. அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளை பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

9. அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர்.

10. ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.

11. நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

12. உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்.

13. ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.

14. நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்.

15. நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

ஆமோஸ் 5